சம்பளப் பிரச்சினையால் முன்னாள் இராணுவச் சிப்பாய் சுட்டுக்கொலை.

கொழும்பு, புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் சம்பளப் பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளது என அதில் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான முன்னாள் இராணுவச் சிப்பாயே உயிரிழந்தார்.

அத்துடன், அவருடன் இருந்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

உயிரிழந்த நபர், நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பும்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

கொழும்பு – 07 பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றில் பணியாற்றிய அவர்களுக்கு 3 மாதங்களுக்கான சம்பளம் வழங்காமல் பணியிலிருந்து நிறுத்திய நிலையில், அதற்கு எதிராக அவர்கள் நட்டஈடு கோரியிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் பணியாற்றிய நிறுவனத்தால் அவர்களுக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதோடு விருந்தகத்தின் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தினர் என்று நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டது.

எனினும், சம்பளம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என உயிரிழந்த நபரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.