அமைச்சுப் பதவி அழைப்பை அடியோடு நிராகரித்த ராஜித.

சர்வகட்சி அரசில் இணைந்து, அமைச்சுப் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நிராகித்துள்ளார்.

அவருக்கு சுகாதார அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சகூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இணக்கம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ராஜிதவுக்கும் தூது அனுப்பப்பட்டது.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும்வரை, இது சாத்தியப்படாது எனவும், இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தைத் தான் மதிப்பதாகவும் ராஜித சேனாரத்தன எம்.பி., சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இம்முறை ராஜித சேனாரத்ன கடும் தொனியிலேயே கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

“ஒழுக்காற்று நடவடிக்கை என்பது நகைச்சுவையாக மாறியுள்ளது. டயானா கமகேவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அவர் பிரிட்டன் பிரஜை. இதை நிரூபித்தால் எம்.பி. பதவியைக்கூடப் பறித்துவிடலாம். ஆனால், இதனை கட்சி செய்யவில்லை. அதனால்தான் டயானா கமகே, எல்லா விடயங்களிலும் கட்சியை விமர்சித்து வருகின்றார். ஹரின், மனுச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், டயானா விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று ராஜித இடித்துரைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.