எரிபொருள் வழங்கக்கோரி தொடர்கின்றது போராட்டம்.

எரிபொருட்களை வழங்குமாறு கோரி நாடெங்கும் நாளாந்தம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நுவரெலியாவில் இன்று அதிகாலையில் இருந்து காத்திருந்த பொதுமக்கள், தமக்கு மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி நுவரெலியா – பதுளை வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு உரிய முறைமையை ஏற்படுத்தக் கோரியும் , வழங்கப்படும் திகதியை உறுதிப்படுத்தக் கோரியும் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற மக்கள் இவ்வாறு வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் எரிபொருள் நிலையப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தால் நுவரெலியா – ஹட்டன் ,நுவரெலியா – ராகலை போன்ற பிரதான வீதிகளூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர்.

நீண்ட நேரத்துக்குப் பின்னர் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சரின் தொலைபேசி கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்று உறுதி வழங்கப்பட்டதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.