9 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் – பிள்ளையான் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரும் பங்கேற்பு

9 வது பாராளுமன்றத்தின் கன்னி கூட்டத் தொடர் சுகாதார வழிமுறைகளுடன் நாளை காலை 9.30 இற்கு ஆரம்பமாகவுள்ள அதேவேளை புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

பிரசுரிக்கப்பட்டுள்ள வர்த்தமானியின் படி 223 உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டு குறித்த கடிதங்கள் பாராளுமன்ற நிர்வாகத்தினால் குறித்த உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இம்முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் தகவல்கள் ஒன்லைன் முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டமை விசேட அம்சமாகும்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபேஜனபல கட்சி ஆகியவற்றின் தேசிய பட்டியல்களுக்கு நாளைய தினத்திற்குள் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாவிடின் புதிய பாராளுமன்றத்தில் அவர்களுக்கான ஆசனங்கள் வெற்றிடமாக இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இம்முறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ள 2 உறுப்பினர்களான பிரேமலால் ஜயசேகர மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் பாராளுமன்றத்திற்கு வருகை தர முடியுமென பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக சிவனேசதுறை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் நேற்றைய தினம் அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.