மகன் இறந்த நிலையில் பறிபோன தாயின் உயிர்! பலாப்பழம், குளிர்பானம் காரணமா? மர்ம மரணங்கள்

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில், அவரது தாயாரும் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரின் புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வேல்முருகன்-பரணி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தாய் பரணி தனது பிள்ளைகள் இனியா மற்றும் பரணிதரனுடன் ஒன்றாக வீட்டில் உணவு உண்டுவிட்டு பலாப்பழம் சாப்பிட்டுள்ளார். உடனே குளிர்பானமும் குடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மூவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சிறுவன் பரணிதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொலிசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தாய் பரணியை சிறுவனின் உடல் அடக்கத்திற்காக உறவினர்கள், மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் பரணிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் பரணி மற்றும் அவரது மகள் இனியா இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாய் பரணியும் நேற்று உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மகள் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறுகையில்,

பலாப்பழம் சாப்பிட்டு விட்டு தொடர்ந்து குளிர்பானம் அருந்துவதால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே உண்மை தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மகன், தாய் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.