அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக் – புதுச்சேரியில் பரபரப்பு

பணியின்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தாக்கப்படுவதை கண்டித்து புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் காலை திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் 500 நிரந்தர ஊழியர்களும் 270 ஒப்பந்த ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இதில் முத்தியால்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் அரசு பேருந்து நேற்று மதியம் சென்றபோது ஏழை மாரியம்மன் கோவில் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி ஏற்றியபோது நேர தகராறு காரணமாக தனியார் பேருந்து ஊழியர்கள் அரசு ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் நேர தகராறில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தாக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கும் தெரிவிக்கும் வகையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர்.

பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பணிமனை முன்பு அனைத்து பேருந்துகளையும் இவர்கள் நிறுத்திவிட்டு வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். இதனால் குமுளி, திருப்பதி, பெங்களூர் போன்ற வெளியூர்களுக்கும் உள்ளூரில் நகரம் மற்றும் கிராமங்களுக்கு பேருந்து இயக்கப்படவில்லை.

நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.
புதுச்சேரியில் 80-க்கும் குறைவான அரசு பேருந்துகளே உள்ளன. தனியார் பேருந்துகளும் ஆட்டோ, டெம்போக்களும் அதிக அளவில் ஓடுகின்றன.

மேலும் தமிழக போக்குவரத்து கழக பேருந்துகளும் இயக்கப்படுவதால் புதுச்சேரி பேருந்து ஓடாததால் பெரிய அளவில் பாதிப்பு காணப்படாது என்றும் சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.