ரணில் பக்கம் சாய்ந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் ரஞ்சனை நேரில் சந்தித்தார் சஜித்.

“மனிதாபிமானம் கொண்ட, மக்கள் மனதை வென்ற அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என நானும் அனைத்து அரசியல்வாதிகளும் மற்றும் சகல இலங்கையர்களும் எதிர்பார்த்துள்ளோம்.”

– இவ்வாறு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று பார்வையிட்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நீண்ட நாட்கள் செல்வதற்கு முன் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை கிடைக்கும் என நான் எதிர்பார்த்துள்ளேன். அந்நாள் வரும் வரை காத்திருக்கின்றேன்.

ரஞ்சன் ராமநாயக்க மனிதாபிமான மிக்க அரசியல்வாதிவாதி; மக்கள் சார் கலைஞர்; மக்கள் செல்வாக்குள்ள பிரபலம். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அவர் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார்.

நல்ல பண்புகளைக் கொண்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இன்று நான் நேரில் சந்தித்து நீண்ட நேரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டேன்

அவர் சுதந்திர குடிமகனாக சமூகத்துக்குத் திரும்பி, உறுதியுடன் சமூக நீதிக்காகப் பாடுபடுவதைப் பார்ப்பதை எனது ஒரே நோக்கம்” – என்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கையின் பிரகாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்குப் பொதுமன்னிப்பளித்து அவரை விடுதலை செய்வதற்கான அனைத்துச் செயற்பாடுகளும் பூரணத்துவம் அடைந்திருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியமை ரஞ்சன் ராமநாயக்க விடுதலையானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமே சென்று விடுவாரோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.