தம்மிக்க தலைமையில் விசேட பொருளாதார அபிவிருத்திக் குழு!

சுதந்திரத்தின் பின்னர் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக விசேட பொருளாதார அபிவிருத்திக் குழுவை உருவாக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

உருவாக்கப்படவுள்ள உத்தேச அபிவிருத்திக் குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக பெரேராவை நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பொருளாதார கொள்கையொன்றைத் திட்டமிடுதல், அதனை நடைமுறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல் ஆகிய முக்கிய பொறுப்புக்கள் மேற்படி குழுவுக்கு ஒப்படைக்கப்படவுள்ளன என்று நிதி அமைச்சின் உயர் அகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாதாந்தம் 800 இற்கும் 900 இற்கும் இடைப்பட்ட அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்து வந்துள்ள எமது நாட்டின் தற்போதைய நிலையில் அந்தத் தொகை 250 இற்கும் 300 இற்கும் இடைப்பட்ட தொகையாகக் குறைவடைந்துள்ளது.

அதனைத் தெளிவுபடுத்திய அந்த அதிகாரி புதிய அபிவிருத்திக் குழுவின் முக்கிய செயற்பாடு முடிந்தளவு நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியைக் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு நடுநிலை வகிப்பதே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்குள்ள அதிகாரம் மற்றும் வசதிகள் வழங்கப்படுவதுடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான நேரடிப் பங்களிப்பை அவர் வழங்கும் வகையில் அனைத்து வாய்ப்புகளையும் அவருக்கு வழங்க அரசு தயாராகவுள்ளது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.