மருமகள் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்ற மாமியார் – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

மருமகள் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து சரணடைந்த மாமியார் கைது செய்யப்பட்டார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தப்பேட்டை ராமாபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மா. இவர் தனது குடும்ப பிரச்னையில் தன்னுடைய மருமகள் வசுந்தரா தலையை வெட்டி எடுத்து வந்து காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வசுந்தராவின் வயது 35.சரணடைந்த சுப்பம்மாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வசுந்தராவுக்கும் சும்பம்மாவின் மகனுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சமீப காலமாக சுப்பம்மாவுக்கும் வசுந்தர மற்றும் அவரின் குடும்பத்திற்கும் சொத்து தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது.

இந்த குடும்ப பிரச்சினை காரணமாக வசுந்தராவின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்து சுப்பம்மாவை தாக்கியதாக தெரியவந்துள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த சுப்பம்மா நேற்று மாலை யாரும் இல்லாத நேரத்தில் வசுந்தராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வசுந்தரா தலையை வெட்டி தனியாக எடுத்த சுப்பம்மா தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வசுந்தரவின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ள நிலையில், கைதான சுப்பம்மா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.