புரட்சியை ஏற்படுத்தியவர்களை வேட்டையாடி வருகின்றது அரசு! – சஜித் குற்றச்சாட்டு.

“இந்நாட்டின் இளம் தலைமுறையினர் பாரிய புரட்சியை முன்னெடுத்தனர். அதன் விளைவாகவே நாட்டை அதலபாதாளத்தில் தள்ளிய கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற முடிந்தது. எனினும், அந்தப் பாரிய புரட்சியையும், மக்கள் போராட்டத்தையும் முன்னெடுத்த இளம் தலைமுறையினருக்கு எதிராக அரச அடக்குமுறை ஏவப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக அவர்களை அரசு வேட்டையாடுகின்றது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இளைஞர் சீர்திருத்தங்கள் குறித்து நேற்று (22) கலந்துரையாடப்பட்டது. இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் இதன்போது கலந்துகொண்டனர். இந்தப் பணியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கான செயலகம் ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்று இளைஞர்களை வேட்டையாடும் யுகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வசந்த முதலிகே உள்ளிட்ட பலருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்க ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமது சொந்த அரசியல் கருத்தை முன்வைக்கும் தவறுக்காக அரசு இளைஞர்களை இப்படி நடத்துகின்றதா எனக் கேள்வி எழும்புகின்றது. அரச பயங்கரவாதத்தில் இருந்து அரசு உடனடியாக வெளியேற வேண்டும்.

அநீதிக்கும், அநியாயத்துக்கும், அடக்குமுறைக்கும் எதிராக முன்நிற்கும் இளைஞர் சமூகத்துடன் ஒன்றிணைந்து, ஐக்கிய மக்கள் சக்தி செயற்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.