பளையில் 1,840 ஏக்கர் காணி இராணுவத்துக்குத் தாரைவார்ப்பு!

கிளிநொச்சி மாவட்டம், பளைப் பகுதியில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணியில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1,840 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்குப் பத்திரம் நகர்கின்றது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு பளைப் பகுதியில் தற்போது 4 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 1,840 ஏக்கர் நிலம் விவசாய அமைச்சின் கீழ் இயங்கிய மக்கள் பெருந்தோட்டச் சபைக்கு 1988 இல் வழங்கியதாக அந்தச் சபை உரிமை கோரி வருகின்றது

பெருந்தோட்டச் சபைக்கு 1988 இல் 1,840 ஏக்கர் நிலம் வழங்கியதற்கான ஆவணமோ – சான்றுகளோ அந்தச் சபையிடமோ அல்லது ஆணைக்குழுவிடமோ இல்லாத சூழலிலும் சபை உரிமை கோரி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்தச் சபையின் பெயரில் நிலத்தை மாற்றி, இராணுவத்தினர் மூலம் அங்கு பெரும் பண்ணை அமைப்பதற்கு 1,840 ஏக்கரையும் சபையின் ஊடாக இராணுவத்தினருக்கு வழங்க எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளையும் விவசாய அமைச்சு மற்றும் காணி அமைச்சு என்பன இணைந்து முன்னெடுப்பது தற்போது தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.