புத்தளத்திலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய நேற்று மாலை பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினர் மற்றும் தமிழ் – முஸ்லிம் மக்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை நேற்றுக் காலை அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் பௌத்த பிக்குகளும், சிங்கள மக்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.