தமிழரின் பிரதான கோரிக்கையைக் கைவிட்டமை குறித்து ஜெனிவாவுக்கு அதிருப்திக் கடிதம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக இம்முறை நிறைவேற்றப்படவுள்ள பிரேரணையின் நகல் தொடர்பில் அதிருப்தி தெரிவித்து இலங்கை விடயத்தைக் கையாளும் பிரதான நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வதிவிடப் பிரதிநிதிகளுக்கும் ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களான மாவை. சேனாதிராஜா(இலங்கைத் தமிழரசுக் கட்சி), சி.வி.விக்னேஸ்வரன் (தமிழ் மக்கள் கூட்டணி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தர்த்தன்(புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), ந. சிறீகாந்தா (தமிழ்த் தேசியக் கட்சி) ஆகியோரே ஒன்றிணைந்து ஒப்பமிட்டு இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

இலங்கை விடயத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகள் முக்கியமாக பிரேரணையில் உள்வாங்கப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஐ,நா. மனித உரிமைகள் பேரவையின் பிரதான அங்கத்துவ நாடுகளிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் என மேற்படி ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி சுரேந்திரன் ஜெனிவாவிலிருந்து தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தின் சாராம்சம் வருமாறு:-

“பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தங்களுக்கு ஏற்கனவே நாங்கள் அனுப்பி வைத்திருந்த போதிலும் வெளிவந்திருக்கும் மாதிரிப் பிரேரணையில் எம்மால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரைத்ததுமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் குற்றவாளிகளைப் பாரப்படுத்த வேண்டும் என்ற விடயம் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம்.

அழிவுகளுக்கான அனுபவத்தைக் கொண்டவர்கள் நாம். சர்வதேச சமூகத்தின் செயலற்ற நிலையினால் நாம் பாரிய விலை கொடுத்துள்ளோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் முகமாக ஐ,நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் பிரேரணையில் நமது கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல் இருப்பதை அவதானிக்கின்றோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கைகளை மாத்திரமல்லாமல் ஐ.நா. உயர் அதிகாரிகளின் பரிந்துரைகளையும் உதாசீனம் செய்து சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணையில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் குற்றவாளிகளைப் பாரப்படுத்தும் எமது பிரதான கோரிக்கையை உள்ளடக்குமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்” – என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.