2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடரின் 2வது போட்டி இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மலான் 82 ரன்களும், மொயீன் அலி 44 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் 4 ரன், 13 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய மிட்செல் மார்ஷ் 45 ரன்னும், மேக்ஸ்வெல் 8 ரன்னும், ஸ்டோய்னிஸ் 22 ரன்னும், டிம் டேவிட் 40 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து 7வது விக்கெட்டுக்கு மேத்யூ வேட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரின் முதலாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.