அனைத்துச் சதித்திட்டங்களும் படுதோல்வி! – நீதி அமைச்சர் கருத்து.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரான அனைத்துச் சதித்திட்டங்களும் படுதோல்வியில் முடிவடைந்தன என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“22 ஆவது திருத்தச் சட்டத்தைத் தோற்கடிக்க ஆளும் தரப்புக்குள்ளும் எதிரணிப் தரப்புக்குள்ளும் இருந்து சிலர் சதித்திட்டங்களைத் தீட்டினர். இதற்கு நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருந்து ஒரு பெரிய புள்ளி தலைமை தாங்கினார். ஆனால், இறுதியில் அனைத்துச் சதித்திட்டங்களும் படுதோல்வியில் முடிவடைந்தன.

22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 179 பேர் வாக்களித்தமை பெரிய விடயம். அதுவும் ஐக்கிய மக்கள் சக்தி ஒரே அணியில் நின்று இந்தத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளமை போற்றத்தக்கது.

22 இற்கு வெற்றி உறுதி என்பதை ஊகித்துக்கொண்ட சதிகாரக் கும்பலைச் சேர்ந்த சிலர் வாக்கெடுப்புக்கு முன்னரே சபையிலிருந்து வெளியேறி விட்டார்கள். இது அவர்களுக்குக் கிடைத்த பேரவமானமாகும்.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது போல் புதிய அரசமைப்பையும் கொண்டுவந்தே தீருவோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.