அக்கரப்பத்தனை தவிசாளராக இ.தொ.காவின் இராமன் தெரிவு.

நுவரெலியா மாவட்டம், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இராமன் கோபாலகிருஷ்ணன் வாக்கெடுப்பின்றி இன்று காலை ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆளும் கட்சி, எதிர்கட்சி என 15 உறுப்பினர்களைக் கொண்ட அக்கரப்பத்தனை பிரதேச சபை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வசமுள்ளது.

இந்தநிலையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக தவிசாளர் பதவியை வகித்த எஸ்.கதிர்செல்வன் கடந்த மாதம் தன்னிச்சையாக தனது தவிசாளர் பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.

இவரின் பதவி விலகலைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஜெயலத் என்பவர் தற்காலிக தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் எஞ்சியுள்ள ஆயுள் காலத்துக்கு நிரந்தரமாகத் தவிசாளர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாய நிலையில் இந்தப் புதிய தவிசாளர் நியமனம் இடம்பெற்றது.

15 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 13 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தொழிலாளர் தேசிய சங்கத்தைச் சார்ந்த சிவனேஷன் மற்றும் சுதாகர் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 13 உறுப்பினர்களுடன் வாக்கெடுப்பைத் தலைமை தாங்கி நடத்திய மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் புதிய தவிசாளரை நியமிக்கும் சட்டவாக்கங்களை சபையில் அறிவித்ததோடு புதிய தவிசாளரைத் தேர்ந்தெடுக்கப் பெயரை மும்மொழியுமாறும் கோரினார்.

இதையடுத்து சபையின் புதிய தவிசாளராக உறுப்பினர் ராமன் கோபாலகிருஷ்ணனின் பெயரை முன்னாள் தவிசாளர் எஸ். கதிர்செல்வன் மும்மொழிய பிரான்ஸிஸ் தேவ ஆசிர்வாதம் வழிமொழிந்தார்.

அதேநேரத்தில் வேறு எவரும் தவிசாளர் பதவிக்குப் போட்டியிடவில்லை.

இந்தநிலையில், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இராமன் கோபாலகிருஷ்ணன் ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டார் என்று மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சபையில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.