தமிழ் அரசியல்வாதிகளுடனும் திலினிக்குத் தொடர்பு உண்டா ?

இலங்கையில் பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி, தமிழ் அரசியல்வாதிகள் எவருடனும் தொடர்பில் இருந்தார் எனத் தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

எனினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருடன் அவர் தொடர்பில் இருந்தார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, திலினி பிரியமாலி தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, அவர் 128 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை மொத்தமாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும், அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் திலினியின் வலையில் சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகள், கலைஞர்கள், வியாபாரிகள் எனப் பலரும் சிக்கியுள்ளனர். கோடிகளை இழந்தும் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.