நடுவர்களின் கவனக்குறைவால் ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசிய ஆப்கானிஸ்தான்.

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தொடரில் இன்று குரூப்1-ல் நடைபெற்ற மிக முக்கியமான சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க ஆப்கானிஸ்தான் அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தவேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

மிட்சேல் மார்ஷ்- மேக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 164 ரன்கள் அடித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் போது, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் வீசிய 4வது ஓவரில், 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஓவரை மார்ஸ்- மற்றும் வார்னர் எதிர்கொண்டனர். முதல் பந்தில் மார்ஷ் 1 ரன் எடுக்க, 2-வது பந்தில் வார்னர் 1 ரன் எடுத்தார். 3-வது பந்தை மார்ஷ் பவுண்டரிக்கு விரட்ட, 4-வது பந்தில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தை வார்னர் டாட் செய்தார்.

6-வது பந்து வீசப்படவில்லை. நடுவர்களின் கவனக்குறைவால் இந்த தவறு நடந்துள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மோசமான ‘அம்பையரிங்’ குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.