220 இலட்சம் மக்களுடன் வீதியில் இறங்கி தேர்தலைச் சந்திப்போம்! – சஜித் எச்சரிக்கை.

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் செயலாகும். மக்கள் கோரிக்கை விடுப்பது தேர்தலே என்பதால் அதை நடத்த வேண்டும். இல்லையெனில் 220 இலட்சம் மக்களுடன் வீதியில் இறங்கி தேர்தலைச் சந்திப்போம்.”

இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

கூட்டுத் தந்திரோபாயங்களால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்று அரசிடம் அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் தலைவராக மகிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டு அந்தக் குழுவின் ஊடாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சிக்கின்றது. பல்வேறு உபாய வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலை மேலும் ஒத்திவைக்காமல் நடத்த வேண்டும் என்று மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்

இந்த ஆணைக்குழுவின் ஊடாக புதிய மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அரசு முயற்சிக்கின்றது.

தேர்தல் முறைமையை மாற்றியமைக்காமல் மக்கள் அபிப்பிராயத்திற்குச் செவிசாய்த்து, அவர்கள் வாக்களிக்கும் வகையில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டியதே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை.

உரிய காலத்தில் அந்தந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், பல்வேறு தந்திர உத்திகளை கையாண்டு தேர்தலை நடத்துவதற்கு தாம் எதிர்ப்பு என்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

அவரது அந்த அறிக்கைகள் இன்றும் செல்லுபடியாகும் என்றால், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் பதவியைப் பெற்று தேர்தலை ஒத்திவைக்கும் தந்திர உத்தியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியாகக் கோரிக்கை விடுக்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.