முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரன் களமிறங்குவாரா? – தேர்தல் வரட்டும் பார்ப்போம் என்று சி.வி.கே. பதில்.

“நடப்பதற்குச் சாத்தியமே இல்லாத மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சுமந்திரனிடம் கேள்வி கேட்டபோதே சுமந்திரன் தானே முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகப் பதிலடி கொடுத்துள்ளார்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சுமந்திரன் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளமை தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போது சிவஞானத்திடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தயவு செய்து இப்போது கதைக்காதீர்கள். ஏனெனில் அது இப்போது மேசையிலும் இல்லை. குறிப்பாக இந்த வருடம் அந்தத் தேர்தல் நடைபெறாது. ஏனெனில் நிதி ஒதுக்கப்படவில்லை.
ஆனாலும் மாகாண சபைத் தேர்தல் ஒன்று வருகின்றபோது அதில் நாங்கள்
ஒருவரை நிறுத்துவோம்.
மாகாண சபைத் தேர்தல் வரட்டும் பார்ப்போம். இல்லாத ஒன்றுக்கு ஏன் பெயர் வைக்கின்றார்கள். யாரை ஏமாற்றுகின்றார்கள்.
உண்மையில் மாகாண சபை தேர்தல் என்பது நடக்க வேண்டியதுதான். ஆனால் அது நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லாத நிலையில் கூட ஒற்றுமையைக் குலைக்கும் சதி வேலைகள் தற்பொழுதே முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதுதான் சுமந்திரன் தானே முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார்.
எனினும், நடப்பதற்குச் சாத்தியமே இல்லாத மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சுமந்திரனிடம் கேள்வி கேட்டபோதே சுமந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆகவே, இப்போது அதைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை. அதையே திரும்பத் திரும்பப் பேசி குழப்ப வேண்டாம்.” – என்றார்.