காதலித்து திருமணம் செய்த ஜோடிக்கு நூதன தண்டனை: மாடுகள் போல் ஏரில் பூட்டி உழ வைத்த கிராமத்தினர்!

காதலித்து திருமணம் செய்துள்ள ஜோடிகளுக்கு கிராமத்தினர் சேர்ந்து நூதனமான தண்டனையை வழங்கியுள்ளனர்.

இந்திய மாநிலமான ஒடிசா, ராயகடா மாவட்டம் கஞ்சமஜ்ஹிரா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொந்த அத்தை மகனை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால், அம்மாநில வழக்கப்படி அத்தை மகன் மற்றும் மகளை திருமணம் செய்வது சமூக வழக்கத்துக்கு எதிரானது.

இதனால் கிராமத்தினர் சேர்த்து அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்தனர். இதற்காக காதல் ஜோடிகளை வயலுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை மாடு போல் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்ய வைத்துள்ளனர்.

அப்போது நபர் ஒருவர் அவர்களை பிரம்பால் அடித்து நிலத்தை உழ வைக்கிறார். இதையடுத்து, அவர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்று சடங்குகள் செய்ய வைக்கின்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, இது குறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்வாதி குமார் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், தண்டனை வழங்கிய கிராம மக்கள் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய இருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.