கறுப்பு ஜூலை நினைவேந்தலும் விடுதலைக்கான போராட்டமும் – யாழ். கிட்டு பூங்காவில் ஜூலை 24, 25ஆம் திகதிகளில்…

கறுப்பு ஜூலை பொது நினைவேந்தலும் – விடுதலைக்கான போராட்டமும் குரலற்றவர்களின் குரல் அமைப்பால் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

“இதுவரை காலமும் இலங்கையின் கொடூர சிறைக்கூடங்களுக்குள் நயவஞ்சகமாகப் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நீதி நியாயத்தைக் கோருகின்ற பொது நினைவேந்தலும், 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலையின்றி சிறைகளுக்குள் வாடிக்கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நூதனக் கவனவீர்ப்புப் போராட்டமும் மக்களது ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறான அறப் பணிகளைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பட்சத்திலேயே, சமூகத்தின் பெயரில் சிறை வாடும் எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி நியாயமும் விடுதலையும் கிடைக்கப் பெறும் எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மனித நேயம் கொண்ட நல்லுள்ளங்கள் ஒருங்கிணைந்து முன்னெடுப்புகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையிலான உதவிகளை “விடுதலைக்கான திறவுகோல்களைக் கனதியாக்குவோம்” என்கின்ற உண்டியல் திட்டத்தின் ஊடாக மனமுவந்து நல்க வேண்டும் என்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.

இந்தப் பொதுவெளி கவனவீர்ப்புப் போராட்டத்தில் இன, மத மொழி கடந்து, வயது பால் வேறுபாடின்றி, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைவோம். சமூக நீதி சமூக நியாயத்தும் விடுதலைப் பயணம் நோக்கிய செயற்பாடுகளைப் பலப்படுத்தி முன்நகர்வோம்.

நல்லெண்ணமும் கருணை உள்ளமும் கொண்ட அனைவரும் சிரமம் பாராது வந்து கலந்துகொள்வதன் மூலமே இலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு திரட்சிமிகு அழுத்தத்தைக் கொடுத்து அன்புக்குரிய எமது சிறை உறவுகளை உயிர்ப்புடன் விடுவிக்க முடியும்.

அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து உறவுகளைச் சிறை மீட்போம் வாருங்கள் எனக் குரலற்றவர்களின் குரல் அமைப்பினராகிய நாம் எமது மக்களை நோக்கி உரிமையோடு அழைப்பு விடுக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.