மரத்தில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்த கைதி உயிரிழப்பு.

மரமொன்றில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள பாரிய மரமொன்றில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கைதியே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கைதியே உயிரிழந்துள்ளார்.

இந்தக் கைதி போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

மேற்படி கைதி கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி சிறைச்சாலையில் உள்ள பாரிய மரமொன்றில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் இந்தக் கைதி நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இதனையடுத்து இந்தக் கைதி மீண்டும் சுகவீனமடைந்த நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.