எத்தியோப்பியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ வழங்கி கௌரவம்!

தி கிரேட் ஹானர் நிஷான்: எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக, ஜோர்டான் நாட்டுக்கு நேற்றுமுன்தினம்(டிச. 15) சென்றடைந்தார். அதைத் தொடர்ந்து ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவுக்குச் சென்றுள்ளார்.

எத்தியோப்பியா பிரதமர் அபி அகமத் அலியுடன் உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

எத்தியோப்பியாவின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் செய்யறிவில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துதல், மாணவர்களுக்கான உதவித்தொகையை இரட்டிப்பாக்குதல் உள்ளிட்டவைகளும் அடங்கும். இதன்மூலம், இந்தியாவில் கல்விப் பயிலும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயனளிக்கும்.

இந்த நிலையில், எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் அபி அகமத் அலி, நாட்டின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கௌரவப்படுத்தினார்.

உலகத் தலைவர்களிலேயே முதன்முறையாக இந்த விருதைப் பெற்றவர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றார்.

விருதுபெற்ற பின்னர் விழா மேடையில் பிரதமர் மோடி பேசுகையில், “உலகின் மிகவும் பழைமையான நாகரிங்களில் ஒன்றான எத்தியோப்பியாவில் இருந்து இந்த விருதைப் பெறுவதை மிகப் பெரிய மரியாதையாகக் கருதுகிறேன்.

அனைத்து இந்தியர்களின் சார்பாக இந்த கௌரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களுக்கும் எத்தியோப்பிய மக்களும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.