குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்ட திருமணங்கள்: தேவஸ்வம் வாரியம் சிறப்பு ஏற்பாடு!

கேரளம், திருச்சூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் செப்டம்பர் 13 அன்று 400-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறவுள்ளன. இதற்காக 409 பேர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்வம் வாரியம் தெரிவித்தது.

திருமணங்களுக்கு மிகவும் உகந்த நாளாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை கருதப்படுகிறது.

திருமண நிகழ்வுகளுக்கு முந்தைய நாள் வரை முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என குருவாயூர் தேவஸ்வம் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

அதிகப்படியான திருமணங்கள் நிகழ்வதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், திருமண நிகழ்வுகளைச் சமூகமாக நடத்தவும் தேவஸ்வம் வாரியம் காவல்துறையுடன் இணைந்து ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

அதிகளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, கோயில் வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும், கோயில் நகரப் பகுதிகள் முழுவதிலும் கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

அதிகாலை 4 மணி முதல் திருமண நிகழ்வுகள் தொடங்கப்படும். தாலி கட்டும் நிகழ்ச்சிக்காக ஆறு திருமண மண்டபங்கள் அமைக்கப்படும். மேலும், சடங்குகளை நடத்துவதற்குத் திருமண நடைபெறும் இடத்தில் கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

தடையற்ற தரிசனம் மற்றும் திருமண நிகழ்வுகளை உறுதிசெய்யப் பக்தர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு தேவஸ்வம் தலைவர் ஏ.வி. கோபிநாத் மற்றும் நிர்வாகி எஸ். ஹரிகோபால் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், கோயில் வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும், கோயில் நகரப் பகுதிகள் முழுவதிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 24 மணி நேரக் கண்காணிப்புப் பணிக்காகப் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.