முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் – அரசுக்கு ‘மொட்டு’ சவால்.
தற்போதைய அரசு மாகாண சபைத் தேர்தலைத் தட்டிக்கழிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போதைய அரசு உண்மையிலேயே மக்கள் செல்வாக்குடன் இருப்பதாக நம்பினால், காலங்கடத்தாமல் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்வர வேண்டும். தேர்தல்களை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல.
அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் பல எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகின்றது. அந்த அதிருப்தியை அளவிடுவதற்கு மாகாண சபைத் தேர்தல் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும். மக்கள் ஆணை யாருக்கு இருக்கின்றது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தும்.” – என்றார்.
