வைத்தியர்களின் போராட்டம் அடிப்படையற்றது; முரண்பாடு இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள்! – அப்பாவி நோயாளர்களின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்.

பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமன முறையை எதிர்த்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் எவ்வித அடிப்படையும் அற்றது” என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நியாயமான காரணங்களுக்காக வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டால் அது குறித்துப் பேச்சு நடத்த முடியும். ஆனால், தற்போது முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டமானது தேவையற்றது. அமைச்சின் கொள்கைகளுடன் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின், அப்பாவி நோயாளர்களின் உயிரைப் பணயம் வைக்காமல் அதனை நீதிமன்றம் ஊடாகத் தீர்த்துக் கொள்ளுமாறு வைத்திய சங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

வைத்தியர்கள் அரச சேவையில் இணைந்துகொள்வதற்கான விண்ணப்பக் கால அவகாசம் இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இந்தக் கால அவகாசம் எக்காரணம் கொண்டும் மேலும் நீடிக்கப்பட மாட்டாது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறிய வைத்தியர்களுக்கு, அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வாய்ப்போ அல்லது அதற்கான ஊதியமோ வழங்கப்படமாட்டாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு மற்றும் வைத்தியர்களின் தொடர் பணிப்புறக்கணிப்பு காரணமாக, சுகாதாரத் துறையில் நிலவும் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அரச வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.