மோட்டார் சைக்கிள் மோதி குடும்பஸ்தர் பரிதாபப் பலி! – நாவற்குழியில் துயரம்.
யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது 44) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியில் உள்ள பஸ் நிலையம் ஒன்றில் நேற்று இரவு பஸ்ஸுக்காக வீதியில் காத்திருந்த வேளையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
