அகழ்வுப் பணிகள் தொடங்கும் வரை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு.

செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர்.

செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. எனினும், தற்போது களத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெறாத காரணத்தால், இன்று அவர்கள் வருகை தரவில்லை.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளான வி.எஸ். நிரஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“செம்மணிப் புதைகுழியில் தற்போது அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியை மட்டும் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் விரும்பவில்லை. அகழ்வுப் பணிகள் நேரடியாக இடம்பெறும்போது நேரில் வருகை தந்து பார்வையிடுவதே பொருத்தமாக இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

எதிர்வரும் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் பின்னரே ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்கள் வருகை தரும் உத்தியோகபூர்வ திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் அனுமதி இப்போதும் அமுலில் உள்ள நிலையில், அகழ்வுப் பணிகளின் ஆரம்பத்துடன் சர்வதேசக் குழுவின் இந்த விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.