போதைப்பொருள் வேட்டை: ஒரே நாளில் 964 பேர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட விசேட சோதனைகளில் 964 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் நாடளாவிய ரீதியில் 965 விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் போதே போதைப்பொருள்களுடன் 964 பேர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 7 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நால்வர் அடையாளம் காணப்பட்டு, அவர்களைப் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைகளின் போது சந்தேகநபர்களிடமிருந்து பல்வேறு வகையான போதைப்பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 12 கிலோகிராம் 858 கிராம் ஹெரோயின், 887 கிராம் ஐஸ், 2 கிலோகிராம் ஒரு கிலோகிராம் 418 கிராம் கஞ்சா, 90 ஆயிரத்து 510 கஞ்சா செடிகள், 2 கிலோகிராம் 505 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 162 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 221 ஆயிரத்து 704 போதை மாத்திரைகள், ஒரு கிலோகிராம் 327 கிராம் மதனமோதகம் மற்றும் 21 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டைப் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் தேசிய வேலைத்திட்டம், தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.