சுரேஷ் சலேவுக்கு திடீர் மாரடைப்பு! – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, திடீரென ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சைப் பிரிவில் இன்று சனிக்கிழமை அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு மற்றும் கடுமையான நெஞ்சு வலி காரணமாக, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணி மற்றும் பல்வேறு உளவுத்துறை முறைகேடுகள் தொடர்பில் சுரேஷ் சலேவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் அண்மைக்காலமாகத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

சட்டத்தின் பிரகாரமே அவர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்திருந்த பின்னணியில், அவர் இன்று திடீர் இதய பாதிப்புக்குள்ளாகி இதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அரசியல் மற்றும் பாதுகாப்புத் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் தற்போது விசேட பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.