இராமநாதன் கல்லூரி மாணவியின் சாவு: ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை! – பொலிஸாரின் மந்தகதியைக் கண்டு ஜோசப் ஸ்டாலின் வேதனை.

இலங்கையில் அண்மைக் காலமாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் நிலவும் மந்தகதி மற்றும் தாமதங்கள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடுமையான அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டார்.

கொழும்பில் ஊடகங்களிடம் நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது:-

“கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவியான தில்ஷி அம்சிகா என்ற சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பாடசாலை மாணவி ஒருவருடன் தொடர்புடைய மிக மோசமான சம்பவமாகும். இந்தச் சம்பவம் நடந்து ஒரு வருடத்துக்கும் மேலாகியும், இதற்கான மரண பரிசோதனை இன்னும் முடிவடையவில்லை.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்ற மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அது குறித்த இறுதித் தீர்ப்பு வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வரவுப் புத்தகங்கள் போன்ற ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இறுதி சிசிரிவி காட்சிகளின் அறிக்கை இன்னும் முழுமையாக கிடைக்கப்பெறாத நிலையில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டெம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முக்கிய வழக்குகளில் நிலவும் மந்தகதி மற்றும் பொலிஸாரின் தாமதம் பெரும் வேதனையளிக்கின்றது.

சிறுவர் விவகார அமைச்சரின் கூற்றுப்படி, கடந்த சில மாதங்களில் மட்டும் 1,413 சிறுவர்கள் மற்றும் பெண்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 498 வழக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரிப்பதற்குக் காரணம், வழக்கு விசாரணைகளில் ஏற்படும் கடுமையான தாமதங்களும், உரிய சட்டக் கோப்புகளில் பொலிஸ் மற்றும் நீதித்துறை எடுக்கும் காலதாமதங்களுமே ஆகும்.

கடந்த மே மாத தொடக்கத்தில், பிரதமரின் அறிவுறுத்தலின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் உள்ளிட்டோர் அடங்கிய விசேட குழு அமைக்கப்பட்டு இது குறித்து ஆராயப்பட்ட போதிலும், இன்னமும் நடைமுறையில் மந்தகதியான போக்கே காணப்படுகின்றது.


எனவே, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டுமாயின், விசாரணைகளை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும். கல்வி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு, எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுக்கக் கடுமையான மற்றும் விரைவான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.