அரசை அபாண்டமாகத் தாக்காதீர்கள்! மனிதாபிமானத்தோடு அணுகுங்கள்!! – எதிர்க்கட்சிகளிடம் முன்னாள் அமைச்சர் வாசு வேண்டுகோள்.
https://sendgb.com/XnR9NAhip4U
சுயநல நோக்கோடு அரசின் மீது அபாண்டமான தாக்குதல்களை நடத்துவதை விடுத்து, அரசு இன்று எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையை ஓரளசுக்கு மனிதாபிமானத்துடனும் அனுதாபத்துடனும் அணுகிப் பேச வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தினார்.
தற்போதைய அரசு சர்வதேச நிதி நெருக்கடிகள், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் நுகர்வோர் நலன் சார்ந்த கொள்கைகள் காரணமாகப் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் காரணமாக அரசு ஒருபுறம் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்த ஒப்பந்தமானது தற்போதைய அரசால் ஏற்படுத்தப்பட்டதொன்றல்ல. இது கடந்த கால அரசால் உருவாக்கப்பட்டு தற்போதைய அரசின் தலையில் சுமத்தப்பட்ட ஒரு சிக்கலான நிலை.
இதேவேளை, அரசு எதிர்பாராத வேறு சில சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளி காரணமாகப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அரசுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் மேலதிகமாக 500 பில்லியன் ரூபாவைச் செலவினமாகச் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய டெங்கு தொற்று நோய்ப் பரவலும் அரசுக்கு மற்றுமொரு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இவ்வாறான தொடர் சவால்களுக்கு மத்தியிலும், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளை ஓரளவுக்கு நியாயமான மட்டத்தில் பேணுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உற்பத்தியாளர்களை விட, நாட்டின் பெரும்பான்மையான மக்களாக விளங்கும் நுகர்வோரின் நலன் குறித்து அரசு அதிகமாகச் சிந்திப்பதனாலேயே இது சாத்தியமாகியுள்ளது. அரசின் இந்த நுகர்வோர் சார்பு அணுகுமுறை பாராட்டுக்குரியது.
எனினும், உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் குறித்து அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. நுகர்வோருக்கு வழங்கும் முக்கியத்துவத்தை உற்பத்தியாளர்களுக்கும் வழங்கத் தவறியமைக்காக அரசு மீது நியாயமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்க வேண்டியது அவசியம் என்றாலும், அதேநேரம் அரசு தற்போது எதிர்நோக்கும் பிரம்மாண்டமான சவால்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.” – என்றார்.
