வவுனியா மேயரைப் பதவி நீக்கும் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை! – சுமந்திரனின் 2 மணி நேர சமர்ப்பணத்தை அடுத்து..

வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனை மேயர் பதவியில் இருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக்கி வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த வர்த்தமானி உத்தரவுக்கு வவுனியாவில் இயங்கும் வடக்கு மாகாணத்துக்கான மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு விதித்தது.

மேயர் சு.காண்டீபனின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நண்பகல் வரை சுமார் இரண்டு மணி நேரம் பல்வேறு சட்ட ஆதாரங்களையும் தீர்ப்புகளையும் முன்வைத்து நீதிமன்றத்தில் தொடர்ந்து மேற்கொண்ட வாதங்களையும் சமர்ப்பணங்களையும் அடுத்து மேற்படி வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிபதி வளன் ஆனந்தராஜா இந்த இடைக்காலத் தடை உத்தரவை வழங்கினார்.

வழக்கை ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அதுவரையில் –
மேற்படி மேயரை பதவி விலக்கி ஆளுநர் விடுத்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தியும் – அந்த வர்த்தமானியில் உள்ள உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்தும் – மேயர் காண்டீபனை மேயர் பதவியில் இருந்தும், மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு எந்த விதமான நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக இடைக்கால தடை விதித்தும் – உத்தரவு பிறப்பித்தார்.

தம்மை மேயர் பதவி மற்றும் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து பதவி விலக்கும் ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மேயர் காண்டீபன் சார்பில் சட்டத்தரணி தயாபரன் தாக்கல் செய்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை விடுத்தார். எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கவும் அவர் பணிப்புரை விடுத்தார்.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதங்களைச் சமர்ப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.