அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற திரைமறைவில் அரசியல் சூழ்ச்சி!

நாட்டில் தற்போது திரைமறைவில் உருவாகி வரும் ராஜபக்ஷக்களின் புதிய அரசியல் ஒன்றிணைவுகள் மற்றும் கூட்டணிகள் தொடர்பில் நாட்டின் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும் கவனத்துடனும் செயற்பட வேண்டும் என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:-

“தற்போது புதிதாக உருவாகி வரும் அரசியல் கூட்டணிகளில் இணைவதற்கோ அல்லது அவற்றுக்கு ஆதரவு வழங்குவதற்கோ முன்னர், மக்கள் அவற்றின் பின்னால் மறைந்திருப்பவர்களை நன்கு கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் தெரியும் தற்காலிக முகங்களை மட்டும் பார்த்து மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. தற்போதைய அரசியல் சூழலைப் பார்க்கும் போது, பிரதான எதிர்க்கட்சியும் கூட குழப்பமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

இந்தப் புதிய கூட்டணிகள் எதுவும் மக்கள் நலனுக்காக உருவாக்கப்படுபவை அல்ல. மாறாக, இழந்த அதிகாரத்தை மீண்டும் எப்படியாவது கைப்பற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்படும் சுயநல அரசியல் கட்டமைப்புகள் ஆகும். எனவே, பொதுமக்கள் எவ்வித அவசரமுமின்றி நிதானமாகச் செயற்பட வேண்டும்.

குறித்த புதிய கூட்டணிகளில் நாமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் முகங்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றன. இவர்களின் பழைய அரசியல் முகமூடிகள் தற்போது மெதுவாக மக்கள் மத்தியில் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர உள்ளிட்ட சிலர் இவ்வாறான சுயநலக் கூட்டணிகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். அனைத்துத் தரப்பையும் ஒன்றிணைத்து ஒரு பாரிய அரசியல் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், எஸ்.எம். சந்திரசேன உள்ளிட்டோரும் இந்த அரசியல் சூழ்ச்சிப் பின்னணியில் இயங்கி வருகின்றனர்.

இத்தகைய தந்திரோபாய அரசியல் ஒன்றிணைவுகள் நாட்டுக்கு மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையை மீண்டும் தோற்றுவிக்கக்கூடும். இவை ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பழைய அரசியல் சக்திகளை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து வலுப்படுத்தும் முயற்சிகளாகவே அமையும். இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியல் நகர்வுகளின் மோசமான விளைவுகள் எதிர்காலத்தில் நாட்டுக்குத் தெளிவாக வெளிப்படும்.” – என்று அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.