அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள் ஆரம்பம்!
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் கொழும்பு 07, மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2026 வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் கடந்த 2026 ஜூன் 22 ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டிருந்தது.
ஆணைக்குழுவின் அமைப்பு மற்றும் பொறுப்புகள்
தலைவர்:- ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ்
செயலாளர்: நாலக திஸாநாயக்க
உறுப்பினர்கள்: 15 உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரசு ஊழியர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவையைக் கட்டமைப்பு ரீதியாகச் சீரமைப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய முக்கிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அமைச்சரின் கருத்துக்கள்
இந்நிகழ்வில் சர்வமத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஆரம்பப் பணிகள் தொடங்கப்பட்டன. நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மேலும் குறிப்பிட்டதாவது:-

“அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருபது ஆண்டுகளுக்குப் பிறகே ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுகின்றது. ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இவ்வாறான ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை.” – என்று சுட்டிக்காட்டினார்.
“அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகள் நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்த போதிலும், அதற்கான விஞ்ஞானபூர்வமான வேலைத்திட்டம் இதுவரை முன்வைக்கப்படவில்லை. ஒரு துறையின் பிரச்சினைகளை மட்டும் தீர்க்க முயன்றால் அது மற்றைய துறையைப் பாதிக்கும் என்பதால், முழு அரச சேவைக்கும் பொருந்தக்கூடிய விஞ்ஞானபூர்வமான வேலைத்திட்டத்தை முன்வைப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.
அரச சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்ப்பதற்கு முந்தைய அரசுகள் தவறியமைக்குத் தெளிவான தேவைப்பாடு இல்லாமை காரணமாகும். ஆனால், ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசிடம் அந்த உண்மையான தேவைப்பாடும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் குழுவும் உள்ளது.” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
