செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு வீடு அமைக்கும் திட்டம் – காசோலைகளை வழங்கி வைத்தார் நீதி அமைச்சர்.
தாய் மற்றும் தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்கான நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு, கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில் வீடுகளை அமைப்பதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி, பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
நீண்டகாலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இந்தக் குடும்பங்களுக்குச் சொந்த வீடு அமைத்துக்கொடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
