யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை பணிப் பொறுப்பேற்பு – புனித மரியன்னை பேராலயத்தில் விசேட கூட்டுத் திருப்பலி.
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகையின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில், யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் புதிய ஆயர் விசேட முறையில் வரவேற்கப்பட்டு, பாரம்பரிய பவனியாக பேராலயத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
தொடர்ந்து, யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் விசேட கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இத்திருப்பலியின்போது அன்ரன் ரஞ்சித் ஆண்டகை யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராகத் தமது பணிப்பொறுப்பை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நாட்டின் பல்வேறு மறைமாவட்டங்களின் ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், சர்வமதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு புதிய ஆயருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.





