உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவிப்பு!
தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஒலி டரஜாலி டஸ்ட்லிக்’ விருதை அந்நாட்டு அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளுக்கான நான்கு நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கினாா்.
முதல் கட்டமாக உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்டை சென்றடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தான் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ் விமான நிலையத்துக்கு நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்று, அதிபர் மாளிகைக்கு ஒரே காரில் சென்றனர்.
உஸ்பெகிஸ்தான் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமா் மோடி, அங்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதிபா் ஷாவ்கத்துடன் இருதரப்பு விரிவான பேச்சுவாா்த்தையிலும் ஈடுபட்டார்.
அப்போது, வர்த்தகம், பாதுகாப்பு ,எரிசக்தி, கலாசாரம், உயர் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, ஆயுர்வேதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலா, கனிமவளம், புவியியல் ஆராய்சி தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நீண்டகால அடிப்படையில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவதற்கு உஸ்பெகிஸ்தானுடன் முக்கிய ஒப்பந்தம் கைழுத்தானது குறிப்பிடத்தக்கது.
உயரிய விருது
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஒலி டரஜாலி டஸ்ட்லிக்’ விருதை அந்நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை வழங்கி கௌரவித்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்டில் உள்ள குக்ஸராய் அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், நாட்டின் உயரிய விருதான ” ஆர்டர் ஆஃப் ஒலி டரஜாலி டஸ்ட்லிக்” விருதை அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ் வழங்கி கெளரவித்தாா்.
இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதில் ஆற்றிவரும் பங்களிப்பை கெளரவிக்கும் நோக்கில், மோடிக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
விருதைப் பெறுவதில் பெருமை
விருது பெறப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இந்த விருதை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு அர்ப்பணித்ததுடன், இது இரண்டு நாட்டின் நாகரிகங்களுக்கு இடையிலான நீடித்த நட்பின் அடையாளம் என்றும் இந்த விருதைப் பெறுவதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பயணத்தில் அடுத்தக்கட்டமாக கிா்கிஸ்தானின் பிஸ்கேக் நகரில் ஆக. 31, செப். 1 ஆகிய நாள்களில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 26-ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.
