22 ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு.
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலித்து, அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்தத் தீர்ப்பை வழங்கி நாடாளுமன்றத்துக்கு அறிவிப்பதற்கு உயர்நீதிமன்றத்துக்கு 3 வார கால அவகாசம் உள்ளது. மனுக்களை விசாரிக்க எந்தெந்த நீதியரசர்கள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே உண்டு. வெளியாட்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப நீதியரசர்களை நியமிக்குமாறு கோருவதற்குச் சட்டத்தில் இடமில்லை.
ஜனாதிபதி தலைமையில் தேசிய மக்கள் சக்தி நடத்தி வரும் மக்கள் பேரணிகளுக்கும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சர்வஜன வாக்கெடுப்பு விவகாரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
கடந்த டிசம்பர் மாதமே திட்டமிடப்பட்டுச் சீரற்ற காலநிலை காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட இக்கூட்டங்கள், கட்சியை அடித்தள மட்டத்தில் வலுப்படுத்தவே நடத்தப்படுகின்றன. மேலும், இதற்கான செலவுகளைக் கட்சியே ஏற்கின்றது. பொதுப்பணம் பயன்படுத்தப்படவில்லை.
22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்க உரிமையுள்ள போதிலும், அதனைச் சாட்டாக வைத்து வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் நாட்டின் அப்பாவிப் பொதுமக்களும் நோயாளிகளுமே கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே, நோயாளிகளைப் பிணையாக வைத்து இத்தகைய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.” – என்று அவர் கேட்டுக்கொண்டார்.
