சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு! – பொலன்னறுவையில் சோகம்.
பொலன்னறுவை, சிரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
பல்லேகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கிய நிலையில் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காணியைச் சுற்றி கம்பி வேலி அமைத்த நபர், தனது வீட்டிலிருந்தே அதற்குச் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த வேலிக்கு அருகில் சென்ற வேளையே சிறுவன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சட்டவிரோத மின்சார வேலியை அமைத்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரிபுர பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
