அனுராதபுரத்தில் செப்டம்பர் 12ஆம் திகதி எதிர்ப்புப் பேரணி நிச்சயம் நடக்கும்! – முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த திட்டவட்டம்.
அனுராதபுரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணியைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், எனினும் அனுராதபுரத்தின் ஏதேனும் ஓர் இடத்தில் இந்தப் போராட்டத்தை நடத்துவதை எவராலும் தடுக்க முடியாது என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் குரலாகவே இந்தப் போராட்டம் அனுராதபுரத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. அனுராதபுர மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான உரம் கிடைக்கவில்லை. வறட்சியான காலநிலையால் மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்குகின்றனர். அரசின் மீதான மக்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ‘சல் காது’ அரங்கைக் கோரிய போதிலும், அரசு சட்டதிட்டங்களைச் சுட்டிக்காட்டி மைதானத்தை வழங்க மறுத்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வளர்ச்சி குறித்து அரசுக்குச் பேரச்சம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே எங்களைத் தினமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து அடக்குமுறைகளைப் பிரயோகிக்க முயல்கின்றனர். அரங்கம் மறுக்கப்பட்டாலும் அனுராதபுரத்தின் ஏதேனும் ஓர் இடத்தில் போராட்டம் நிச்சயமாக நடைபெறும்.” – என்றார்.
22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில், இது நீதித்துறையின் சுயாதீனத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனச் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதை அவர் ஆமோதித்தார்.
நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது குறித்து மக்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றாலும், நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் நிலவும் போது குறுக்கு வழியில் அரசு தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வதையே மக்கள் எதிர்க்கின்றார்கள் என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் உயர்ந்த நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
