இஸ்ரோவின் அடுத்த சாதனை: ‘இ.ஓ.எஸ்.-5’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிகவும் லட்சியமிக்க ஜூசாட்-1 ஏ’ என்று அழைக்கப்பட்ட ‘இ.ஓ.எஸ். 5’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-17’ ராக்கெட்டில் பொருத்தி விண்ணுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டது.

வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
இந்த நிலையில், ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் முடிந்ததையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.18 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பாதையில் ‘இ.ஓ.எஸ்.-5’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

புதிய வலிமை
இஸ்ரோவின் மற்றுமொரு மிகச்சிறந்த சாதனை மற்றும் நமது தேசத்திற்கு ஒரு பெருமைக்குரிய தருணம். புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையிலிருந்து, இந்தியாவின் முதல் படமெடுக்கும் செயற்கைக்கோளான ‘இ.ஓ.எஸ்.-5’ -ஐ சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி-எப்17 ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதல், இந்தியாவின் விண்வெளித் துறையை வரையறுக்கும் சிறப்பு, புதுமை மற்றும் வளர்ந்து வரும் திறன்களின் பிரதிபலிப்பாகும். இஸ்ரோவிற்கும் இந்தியத் தொழில்துறைக்கும் இடையிலான வளர்ந்து வரும் கூட்டாண்மை, நமது விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமையையும் அளவையும் சேர்ப்பதோடு, ஒட்டுமொத்த விண்வெளிச் சூழலமைப்பிலும் இந்தியாவின் திறன்களை விரிவுபடுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.