நல்லூரில் ஆசிரியரின் வீட்டில் திருடியவர் 20 லட்சம் ரூபா தங்க நகைகளுடன் கைது!

யாழ்., நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் 20 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.

நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள ஆசிரியரின் வீடொன்றில் கடந்த 4ஆம் திகதி நகைகள் திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் நாவற்குழியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடமிருந்து 7 தங்கப் பவுண் தாலிக்கொடி, நெக்ளஸ், ஒரு தங்கப் பவுண் அளவுடைய 3 சங்கிலிகள், 3 சோடி தோடுகள், ஒரு மூக்குத்தி, 2 மோதிரங்கள், பெறுமதி வாய்ந்த அலைபேசி ஒன்று மற்றும் 2 பவுண் தங்க நகையை விற்பனை செய்த சிட்டை என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படுவார்.

Leave A Reply

Your email address will not be published.