11 தமிழக மீனவர்கள் இன்று விடுவிப்பு.

யாழ்., காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாதச் சிறைத் தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து அவர்களை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

அதேவேளை, அவர்களின் இரண்டு படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கப் புறப்பட்ட 11 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இருவேறு சந்தர்ப்பங்களில் கைதான அவர்கள், நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

11 மீனவர்களையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 11 மீனவர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்து அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து அவர்களை நீதிவான் விடுவித்தார்.

அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை அரசுடமையாக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.