நாட்டையும் மக்களையும் நாசப்படுத்தும் ரணில்! – சஜித் அணி குற்றச்சாட்டு.

“ராஜபக்சக்களைப் போல் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டையும் மக்களின் வாழ்வையும் நாசப்படுத்தி வருகின்றார்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“மொட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று மக்கள் நினைத்த போதிலும் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கிய அந்தத் தரப்பினர் தங்களது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டனர்.

ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொறுப்பை ஏற்றால், அவர் சர்வதேச ரீதியில் நட்புறவைப் பேணி, சர்வதேச அளவில் நிதி உதவிகளைப் பெற்று நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பார் என்று மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்தது.

எனினும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு டொலர் இருப்பை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது என்ற கேள்வியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எழுப்பியுள்ளார். இது உண்மையில் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்க என்பவர் ஆரம்பத்திலிருந்தே நாட்டின் சொத்துக்களை விற்றே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நபர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த காலங்களிலும் அவர் நாட்டின் சொத்துக்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்தார். விவசாய பொருளாதாரம் பலம் பெற்றதா? நாட்டு மக்களின் வயிறு நிரம்பியதா? நாட்டு மக்களின் சட்டைப்பைகளுக்கு பணம் சென்றதா?

நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தமை ஊடாகப் பெற்றுக்கொண்ட பணம் எங்கு சென்றது என்பதை மக்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில் தற்போது நட்டம் என்ற போர்வையில் இலாபம் ஈட்டும் நிறுவனங்களையே விற்பனை செய்ய ரணில் விக்கிரமசிங்க முயலுகின்றார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.