‘றோ’ தலைவர் கொழும்புக்கு இரகசிய பயணம்! – மூடிய அறைக்குள் ரணிலுடன் பேச்சு.

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு’ எனப்படும் ‘றோ’ அமைப்பின் தலைமை நிர்வாகி சமந்த் கோயல் இரகசிய பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்து சென்றுள்ளார் என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முக்கிய பேச்சுகளை நடத்தியிருக்கின்றார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘றோ’ இந்தியாவின் நலனைக் கருத்தில்கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதி செயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும்.

முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 ஆம் ஆண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கின்றது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் ஆவார். இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ‘றோ’ அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும், பிரதமருக்கும் தனது அறிக்கைகளை நேரடியாக அனுப்புவார்.

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘றோ’ வின் தலைமை நிர்வாகி மூடிய அறைக்குள் ரணிலுடன் பேச்சு நடத்தியிருப்பது அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.