வடக்கில் வியாழக்கிழமை முதல் கடும் மழை பெய்யும்!

வடக்கு மாகாணத்துக்கு நாளைமறுதினம் 8 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 10 ஆம் திகதி சனிக்கிழமை வரையிலான காலப் பகுதியில் கடும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்தக் காலப் பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்துக்கு கிடைக்கவேண்டிய பருவமழை கடந்த 20 நாள்களுக்கு மேலாக உயரழுத்தம், பனிக்குளிரலை ஆகியவற்றால் தள்ளிப்போனது. ஆயினும் பனி மெல்ல விலகி இப்போது உயரழுத்தமாக ஒடிசாவுக்கு மேலாக நிலைகொண்டிருக்கின்றது.

இந்த நேரத்தில் தென்சீனக்கடலின் ஊடாக வங்கக்கடலில் இறங்கியிருக்கும் தாழ்வு நிலையானது புயலாக மாறி நாளைமறுதினம் வியாழக்கிழமை வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தை அண்மித்து வந்து தமிழகத்தின் நாகப்பட்டினம் – சென்னையை நோக்கிச் செல்லும்.

அவ்வாறு பயணிக்கும்போது தரையை கடக்க முன்னர் புறக்காரணிகளால் நலிந்த புயலாக மெதுவாக செயலிழக்கும். கடல் பகுதிகளிலேயே காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் – என்று வானிலை அறிக்கையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.