10ஆம் வகுப்பு மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து – 2 மாணவர்கள் பலியான சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள கோபோலி என்ற இடத்தில் நடந்த பேருந்து விபத்தில் இரு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

செம்பூர் என்ற பகுதியில் உள்ள கோச்சிங் சென்டரில் படிக்கும் 48 மாணவர்கள் லோனாவாலா என்ற இடத்திற்கு பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் அனைவருமே 10 ஆம் வகுப்பு படிப்பவர்கள்.மாணவர்களுடன் கோச்சிங் சென்டரில் பணிபுரியும் ஆசிரியர்களும் உடன் சென்றுள்ளனர்.

இவர்கள் சுற்றுலாவை முடித்து சொந்த ஊருக்கு திரும்பியபோது கோபோலி பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து காரணமாக சம்பவ இடத்திலேயே இரு மாணவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற மாணவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை கூடுதல் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.