2018ல் அரசியல் எண்ட்ரி.. 2022ல் அமைச்சர்.. உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணம்!

திமுக எம்எல்ஏ-வான உதயநிதி ஸ்டாலின். அமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார். காலை 9.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அரசியலில் தடம் பதித்த உதயநிதி ஸ்டாலின், 2019ம் ஆண்டு ஜூலையில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக கூட்டணிக் கட்சிகளுக்காக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர், 2021 சட்டப்பேரவை தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, கோட்டைக்குள் அடியெடுத்து வைத்தார்.

அப்போதிருந்தே உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று மூத்த அமைச்சர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அண்மையில், திமுக இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும், அவருக்கு சிறப்பு திட்ட அமலாக்கத்துறை ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க, முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்து உள்ளதாகவும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்துவிட்டதாகவும் தெரிவித்தார். பதவியேற்பு நிகழ்ச்சி, கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என கூறியுள்ளார்.

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, சேப்பாக்கத்தின் தென்றல் இனி செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்பதாக, அதன் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று தான் என்பதால், ஆச்சரியப்படத் தேவையில்லை என பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், மூத்த அமைச்சர்கள் மத்தியில் உளக்குமுறல் இருக்கத் தான் செய்யும் எனவும் கூறியுள்ளனர்.

உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது மகிழ்ச்சியளிப்பதாக அவரது நண்பரும், நடிகருமான விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதை அடுத்து, கோட்டையில் அவருக்கு தனி அறை ஒன்று தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், 4 அமைச்சர்களின் இலாகாக்கள் நாளை மாற்றம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.